பல்லடம் அருகே அருள்புரத்தில் தாய் திட்டியதால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பிஹார் மாநிலம், ஜபால்பூர் பகுதியைச் சேர்ந்த கமல்சிங் மகன்கள் ராஜ்கிஷோர் சிங் (23), பீர்குமார் (20).
இருவரும் பல்லடம், அருள்புரம் செந்தூர் காலனியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர்.
இருவரும் வாரம் தோறும் வாங்கும் சம்பளத்தில் தங்களது செலவு போக மீதித் தொகையை அவர்களது தந்தையின் வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கமாம்.
கடந்த வாரம் பீர்குமார் தனது நண்பர்களுடன் சம்பள பணத்தில் மது அருந்தியதால் பணம் அனுப்பி வைக்கவில்லையாம்.
அதுகுறித்து, அவரது தாய் இருவரிடமும் செல்லிடப்பேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் பீர்குமாரை கண்டித்து திட்டியதாகத் தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த பீர்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவில் வந்த அவரது அண்ணன் ராஜ்கிஷோர்சிங் அதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.