திருப்பூரில் இளைஞரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற 8 பேர் கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர், கொங்கு பிரதான சாலை பவானி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது சகோதரர் வெங்கடேஷ் (22). இவர், திங்கள்கிழமை மாலை பவானி நகர் பகுதியில் சென்றபோது, அவரை வழிமறித்த 8 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது. இதில், அவருக்கு தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை வெங்கடேஷ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்னையால் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.