தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் அருகே உள்ள எல்லப்பநாயக்கன்வலசைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (52). இவர், காங்கயத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தார். தனது உறவினர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து துக்கம் விசாரிப்பதற்காக தாராபுரம் அருகே உள்ள துலுக்கனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார்.
பின்னர், அவர் மீண்டும் காங்கயத்துக்கு திரும்பிச் சென்றபோது, அமராவதி புதுப்பாலத்தின் அருகே இருந்த வேகத்தடையில் அர்ஜுனின் இருசக்கர வாகனம் வேகமாக ஏறி இறங்கியுள்ளது. இதில், நிலைகுலைந்த அர்ஜுனன் தடுமாறிக் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அர்ஜுனன் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.