அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 18 புதிய பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து புதிய பேருந்துகள் போக்குவரத்தைத் தொடக்கிவைத்தார்.
இதில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருப்பூர் மண்டலம் சார்பில், திருப்பூர் 1, 2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, பழனி 1,2 ஆகிய கிளைகளின் சார்பில் திருப்பூர் - உடுமலைப்பேட்டை, திருச்செந்தூர், செங்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை, அந்தியூர், கரூர், திருச்சி, கும்பகோணம், ஈரோடு, கடலூர் ஆகிய 18 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாநகரக் காவல் ஆணையர் மனோகரன், காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் உ. தனியரசு, அரசு போக்குவரத்துக்கழகத்தின் திருப்பூர் மண்டலப் பொது மேலாளர் கோவிந்தராஜ், துணை மேலாளர்கள் முத்துகிருஷ்ணன் (வணிகம்), வேலுசாமி (தொழில்நுட்பம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.