உடுமலை ரயில் நிலைய வளாகத்துக்குள் சிற்றுண்டி நிலையம் திறக்கப்பட்டதுடன், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை ரயில் நிலையத்தில் பாலக்காடு - சென்னை விரைவு ரயில், கோவை - மதுரை மற்றும் பொள்ளாச்சி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் நின்று செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்லும் நிலையில் உடுமலை ரயில் நிலைய வளாகத்துக்குள் சிற்றுண்டி நிலையமும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் உடுமலை ரயில் நிலைய வளாகத்துக்குள் ஒரு சிற்றுண்டி நிலையமும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் தெற்கு ரயில்வே மதுரை மண்டல அலுவலகம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி சிற்றுண்டி நிலையத்தில் பிஸ்கட், ரொட்டி, குழந்தைகளுக் கான திண்பண்டங்கள், குடிநீர் பாட்டல்கள் ஆகியவைகள் விற்கப்படுகின்றன. மேலும் இலவசமாக சுகாதாரமான குடிநீர் (ஆர்ஓ வாட்டர்) வழங்கவும் தனியாக ஒரு யூனிட் திறக்கப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி கூறியதாவது:
பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு சிற்றுண்டி நிலையம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வரும் பயணிகள் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வசதியாக ஒரு ஸ்டேண்ட் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.