உடுமலை அருகே சாக்கடையில் சடலமாகக் கிடந்த பெண் சிசு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலை தாலுகா, சின்னவீரம்பட்டி கிராமத்தில் சாக்கடையில் ஒரு பச்சிளம் குழந்தை சாக்கடையில் கிடப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து உடுமலை போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். ஒரு பெண் சிசு தொப்புள் கொடியுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துதம், அதன் அருகில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இறந்து கிடந்த சிசுவையும், மனநிலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணையும் மீட்ட அதிகாரிகள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: சின்னவீரம்பட்டியில் சாக்கடையில் இறந்து கிடந்த பெண் சிசு மீட்கப்பட்ட நிலையில் அதன் அருகில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மீட்கப்பட்டார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.