விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளுக்கு தொல்லை கொடுக்கும் போலீஸாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நெருபெரிச்சல் பகுதியில் வசித்து வரும்திருநங்கைகள் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் திருநங்கையாக மாறியுள்ளதாக அவர்களது பெற்றோர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில், அவரை தேடுவதாகக் கூறி திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகள் தங்கியுள்ள குடிமங்கலம், அம்மாபாளையம், பூலுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளை மிரட்டி வருகின்றனர். இதனால், திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், திருநங்கைகளை மிரட்டும் குடிமங்கலம் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.