உடுமலையில் வருவாய்த் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
குட்டைத் திடலில் இருந்து தொடங்கிய பேரணியை உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
வட்டாட்சியர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து கச்சேரி வீதி, கல்பனா மைதானம், நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் குட்டைத் திடலை அடைந்தது.
பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்த முழக்கங்களை எழுப்பியபடி சென்ற மாணவர்கள் இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தியபடி சென்றனர். துணை வட்டாட்சியர் பொன்ராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.