தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தக் கோரி பனியன் சங்க கூட்டு கமிட்டி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏடிபி, எம்எல்எஃப், பிஎம்எஸ், எச்எம்எஸ் உள்ளிட்ட பனியன் சங்க கூட்டு கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியரிம் அளித்துள்ள மனு விவரம்:
தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பனியன் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்திதர வேண்டும். பீஸ் ரேட் அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சட்டப்படி போனஸ், விடுமுறைச் சம்பளம் உள்ளிட்டவை வழங்கவேண்டும். உடனடியாக இ.எஸ்.ஐ.மருத்துவமனை அமைக்க வேண்டும். பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.