தொழில் நல்லுறவு விருது பெற, தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சங்கங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலை அளிப்பவர் மற்றும் தொழிலாளர் இடையே, தொழில் அமைதியும், தொழில் உறவு நிலவுவதை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு, தொழில் நல்லுறவுப் பரிசுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள முத்தரப்புக் குழு தேர்த்தெடுக்கும். இந்த விருதுக்கான விண்ணப்பங்களைத் தொழிலாளர் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், அந்தந்த மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், வட்டாரத் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகம், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான விவரங்களை இணைத்து, சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும்.