காங்கயம் அருகே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் வெறும் 5 பேர் மட்டுமே கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர்.
காங்கயம் தாலுகாவுக்கான அம்மா திட்ட முகாம் காடையூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கயம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் புனிதவதி, காங்கயம் நில வருவாய் ஆய்வாளர் பி.செந்தில்குமார், காடையூர் கிராம நிர்வாக அலுவலர் எஸ்.சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
இந்த முகாமில், முதியோர் உதவித் தொகை கேட்டு 3 பேர், விதவை உதவித் தொகை கோரி ஒருவர், பட்டா மாறுதல் கோரி ஒருவர் என 5 பேர் மட்டுமே மனுக்கள் அளித்தனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறியபோது, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை அவரவர்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் இ-சேவை மையம், பொது சேவை மையம் ஆகியவற்றில் விண்ணப்பம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், அம்மா திட்ட முகாமில் குறைவான எண்ணிக்கையிலேயே வருகை உள்ளது என்றனர்.