தீபாவளியைப் பண்டிகைக்காக திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புகிறவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
2018 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்கலாம்.
படிவம் ஏஇ-5 இல் பூர்த்தி செய்த விண்ணப்பம் 6 பிரதிகள், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் வரைபடங்கள் 6 பிரதிகள், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரர் எனில் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகைக் கட்டடம் எனில், வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ. 20 க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக் கட்டணம் ரு. 500-ஐ திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கி (ஊத்துக்குளி சாலை) மைய கிளையில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு ஆகியவற்றுடன் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.