திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ரூ. 43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாராபுரம் சாலையில் சந்திப்பு வரை புதிய பாலம் அமைக்கப்பட்டது.
இப்பாலத்தினை காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 6.96 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாவட்ட காவல் அலுவலகத்தினையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதையொட்டி திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, மாநகர காவல் ஆணையர் மனோகரன், மாநகர துணை ஆணையர் இ.எஸ்.உமா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு. குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ. நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கயம்), மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், கோட்டப்பொறியாளர் செந்தில் குமார், உதவி கோட்டப்பொறியாளர் சி.ராஜேஷ்கண்ணா, உதவி பொறியாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.