உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி ஆலோசகர் ஜெ.மஞ்சுளா துவக்கி வைத்தார். வி.நாட்டுத்துரை வரவேற்றார். கோவை அட்ராய்டு டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த மென்பொருள் பயிற்சியாளர் ஏ.சஞ்சீவ், எஸ்.ஆனந்த்குமார் ஆகியோர் வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை வழங்கினர்.
நேர்காணலை எதிர்கொள்வது, சுயவிவரம் தயாரித்தல், தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், பணியிடத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவை பெறுவது, குழு அங்கத்தினருடன் பழகும் தன்மைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முகாமில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன.
இதைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் உரையாற்றினர். இதில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி கல்வி நெறியாளர் எம்.ராமநாதன், முதல்வர் எம்.கண்ணன் ஆகியோர் பேசினர். விரிவுரையாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.