அவிநாசி பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவிநாசி பேரூராட்சி, 12ஆவது வார்டுக்கு உள்பட்ட நேரு வீதி, வ.உ.சி. காலனி, பழனியப்பா காலனி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், சேவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கவில்லை. அரசு மருத்துவமனையின் பின்புறம் சாக்கடைக் கால்வாயில் நீண்ட காலமாக அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இப்பிரச்னைகளைத் தீர்க்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
மறியல் குறித்து தகவலறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சாக்கடைக் கால்வாய் அடைப்புகளை உடனடியாக நீக்கி, கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும், சுழற்சி முறையில் 12ஆவது வார்டு பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை குடிநீர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.