தண்ணீரை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தினர்.
பள்ளி நிர்வாக அலுவலர் அமித்குர்ரே பேரணியைத் தொடக்கிவைத்தார். முதல்வர் ஹெச்.எஸ்.சிதானா தலைமை வகித்தார். இப்பேரணியில் 41 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பல்வேறு கிராமங்கள் வழியே சென்ற இப்பேரணியின் வழித்தடத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன. அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இப்பேரணியில் பங்கேற்றவர்களுக்கு அமர் சைனிக் பள்ளித் தலைமை ஆசிரியர் மீனு சிதானா சான்றிதழ்கள் வழங்கினார்.