பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். தாராபுரம் நகரச் செயலர் கே.எஸ்.தனசேகர், ஒன்றியச் செயலர் எஸ்.வி.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், குட்கா ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் அதிமுக அரசு பதவி விலகக் கோரியும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரஸ்வதி, பிரபாவதி, இலக்கிய அணிச் செயலர் அருள்பிரகாஷ், முன்னாள் நகர்மன்றத் தலைவி மு.சாந்தாதேவி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ப.கதிரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.