தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக் கணக்கெடுப்பில், ஒவ்வொரு குடியிருப்பிலும் உள்ள 6 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் பற்றிய விவரம், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதில், கண்டறியப்படும் மாணவர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு, எதிர்வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அவர்களை வழக்கமான பள்ளிகளிலோ, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் எனில், உண்டுஉறைவிடப் பள்ளிகளிலோ, இணைப்பு மையங்களிலோ சேர்க்கை பெற செய்து தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும். கடந்த 10-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இக் கணக்கெடுப்பில், இதுவரை 55 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், 160 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களில், மனவளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், பார்வை குன்றியவர்கள், பேச்சுத் திறனற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களை பகல்நேர பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்படுவதோடு, மருத்துவ முகாமில் கலந்துகொள்ள செய்து, தேசிய அடையாள அட்டை தேவை உள்ளவர்களுக்கு பராமரிப்பு நிதி, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை, உபகரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.