மருமகளைக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை
மருமகளை கொலை செய்த மாமனாருக்கு, தருமபுரி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த குத்தாலஅள்ளியைச் சேர்ந்தவர் தொழிலாளி சுப்பிரமணி (60). இவரது மகன் ரமேஷ். இவரின் மனைவி ஆனந்தி (25). இத் தம்பதியர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், கடந்த 6.11.2015 அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆனந்தி தருமபுரியிலுள்ள தன் தாய் வீட்டுக்கு செல்ல குத்தாலஅள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார்.
இதைக் கண்ட அவரது மாமனார் சுப்பிரமணி, தனது மருமகள் ஆனந்தியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், நிகழ்விடத்திலேயே ஆனந்தி உயிரிழந்தார்.
இதையடுத்து, சுப்பிரமணி, அவரது மகன் ரமேஷ், யோகம்மாள், மகள் சங்கீதா, மருமகள் சரண்யா ஆகிய 5 பேர் மீது பாலக்கோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முடிவுற்ற நிலையில், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நால்வரையும் வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்தார்.