அரூர் அருகே வெள்ளிக்கிழமை லாரிகள் நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி மகன் சசிகுமார் (30). இவர், கோவையில் இருந்து சென்னைக்கு இரும்பு தளவாடப் பொருள்களை ஏற்றிக்கொண்டு அரூர்-ஊத்தங்கரை நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது, ஆந்திரத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காக ஜவுளி பாரம் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்குநேர் மோதியதில், ஓட்டுநர் சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், லாரி ஓட்டுநரான சித்தூர் மாவட்டம், நகரி பகுதியைச் சேர்ந்த வேலு மகன் மூர்த்தி (28) காயமடைந்தார். விபத்து நேரிட்ட லாரியானது நெடுஞ்சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் அரூர்-ஊத்தங்கரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் என்.மணிமாறன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் போக்குவரத்து பாதிப்புகளை சரி செய்தனர். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.