ஒகேனக்கல் குடிநீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கேட்டுக் கொண்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது .
கடுமையான வறட்சியின் காரணமாக ஒகேனக்கல் குடிநீர் வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒகேனக்கல் குடிநீரை மக்கள் சிக்கனமாக குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்தப் பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்றார்.
கூட்டத்தில் சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இதுவரை நடைபெற்றுள்ள பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மகளிர் திட்ட இயக்குநர் க. ஆர்த்தி, ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட முதன்மைப் பொறியாளர் இளங்கோவன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.