மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தருமபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவி எஸ்.உதயகுமாரி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
"நீட்' நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கான எரிவாயு மானியத்தை ரத்து செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. எனவே, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாநிலம் முழுவதும் விரைவான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, வட்டாரத் தலைவிகள் தனம், சுபேதா, எம்.செண்பகவள்ளி, மாவட்டப் பொருளர் டி.பழனியம்மாள், மாவட்ட துணைத் தலைவிகள் கமலா, ஜெ.ஷாகிதா, தனலட்சுமி, மாவட்டச் செயலர் மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.