தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி மற்றும் குறு வள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடத்துக்கு திருமணமான பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் (பொ) அ.சங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்டத்தில் 78 அங்கன்வாடி பணியாளர்கள், 249 குறு மைய அங்கன்வாடி பணியாளர்கள், 349 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு மைய அங்கன்வாடி பணியாளர் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி, குறைந்த பட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் 25 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மலைப் பகுதிகளில் வசிப்போர் 20 முதல் 40 வயது வரை இருக்கலாம். அதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரை இருத்தல் வேண்டும்.
உதவியாளர் பணியிடத்துக்கு, எழுத, படிக்க தெரிந்த 20 முதல் 40 வயது முடிவுறாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் அதிக பட்சம் 43 வயது வரையும், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மலைப் பகுதிகளில் வசிப்போர் 45 வயது வரையும் இருக்கலாம்.
அங்கன்வாடி மையம் காலியாக உள்ள அதே ஊராட்சியில் வசிக்கும் தகுதியான நபர்கள் இல்லையெனில், அருகாமையிலுள்ள ஊராட்சிகளிலிருந்து நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கான, மாதிரி விண்ணப்பம், சம்பந்தப்பட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பிறந்த தேதி, கல்வித் தகுதி, இனச்சான்று, இருப்பிடச் சான்று, குடும்பஅட்டை நகல், வாக்காளர் அடையாளர் அட்டை, ஆதார் அட்டை, விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் இருப்பின் அதற்கான சான்று, வருவாய் சான்று ஆகியவற்றை இணைத்து வரும் ஆக.16-ஆம் தேதி முதல் ஆக.26-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலம் தெரிவிக்கப்படும்.