அரூர் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் கச்சேரிமேடு சாலைச் சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதுக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி.வேலாயுதம் தலைமை வகித்தார்.
அரூர் அரசு மருத்துவமனையில் நாய், பாம்பு உள்ளிட்ட விஷக்கடிகளுக்க உரிய வகையில் மருந்துகள் இருப்பு இருப்பதில்லை. இதனால் விஷக்கடிகளால் பாதிக்கப்படும் மக்கள் பல்வேறு இன்னல்களை அடைகின்றனர். எனவே, அரூர் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகளை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும். கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனையில் இயங்காத ஜெனரேட்டரை முறையாக இயக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான மின் விசிறிகள், படுக்கை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சாதாரண சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைக்கு மருத்துவர் காலதாமதமாக வருவது, சிகிச்சை அளிப்பதில் மெத்தனப் போக்கு குறித்து புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதை கைவிட வேண்டும். நோயாளிகளை தரக்குறைவாக பேசும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்தம், சிறுநீர், சர்க்கரை உள்ளிட்ட ஆய்வக பரிசோதனைகளில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருள்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரத்த வங்கியில் உள்ள சேதமடைந்த குளிர்பதனப் பெட்டியை சீரமைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மல்லிகா, வட்டச் செயலர் தனலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வட்டச் செயலர் கே.தங்கராசு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.பி.சின்னராசு, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் இ.கே.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.