தருமபுரி: வருகிற டிச.4-ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்என ஜெ.தீபா தெரிவித்தார்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசியது : முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதில் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை. இரட்டை இலை சின்னத்தை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். தமிழக அரசில் ஊழல் மலிந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் தமிழக அரசு நடந்து வருகிறது. எனவே, ஆட்சியில் உள்ளவர்கள் பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தீபா பேரவை சார்பில் போட்டியிடுவேன். இதற்காக வருகிற டிச.4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று நம்பிக்கை இல்லை. ஜெயலலிதாவுக்கு வாரிசு இருப்பதாக சிலர் பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். இது, அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல். இவ்வாறு பரப்புரை செய்பவர்களின் பின்னால் வேறு யாராவது இருக்கக் கூடும். இது தொடர்பாக வழக்கு தொடுப்போம் என்றார்.