தெருக்கூத்து கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என தெருக்கூத்து கலைஞர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் ஒன்றிய செயற்குழுக் கூட்டம், அரூரில் சங்கத் தலைவர் ஆர்.ஜி.மூர்த்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
60 வயது நிரம்பிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குகிறது. தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் தெருக்கூத்து கலைஞர்கள் இருப்பதால், இந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக அரசு வழங்க வேண்டும்.
மேலும், உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பை 40-ஆக குறைக்க வேண்டும். தகுதியுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையும், அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சீட்டும் வழங்கவேண்டும்.
தெருக்கூத்து கலைஞர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெருக்கூத்து கலைஞர்கள் நலச் சங்கத்தின் அரூர் ஒன்றிய தலைவராக ஆர்.ஜி.மூர்த்தி, துணைத் தலைவராக டி.ஜெய்சங்கர், செயலராக சுந்தரேசன், துணைச் செயலராக எஸ்.ஆர்.தவமணி, பொருளாளராக சோலை பெருமாள், துணைப் பொருளாளராக ராஜவேல், அவைத் தலைவராக டி.பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்களாக பழனி, அம்பிதுரை, கோவிந்தன், முருகன், ஜெ.கலைச்செல்வன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், சங்க தருமபுரி மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி, மாவட்டச் செயலர் எம்.ஜி.மணி, திரைப்பட நடிகர் சிங்காரவேல், கவிஞர்கள் ரவீந்திரபாரதி, ஸ்ரீமதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.