ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
அரூரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது : தமிழகத்தில் ஊழல் நிறைந்தஆட்சி நடைபெறுகிறது. இதனால், தமிழக மக்கள் மாநில அரசின் செயல்பாடுகள் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உறுதியாக வெற்றி பெறுவார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி. தினகரன், அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் ஆகியோர் இடையே தேர்தலில் வெற்றிப் பெறுவதை விட, வாக்கு வித்தியாசத்தில் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சிக்கு வரும் சட்டப் பேரவைத் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
நலிந்த மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில் அவ்வாறு இல்லை. எனவே, தற்போது அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளுக்கு மத்திய, மாநில அரசு சலுகைகள் வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிவிதிப்புகளை அதிகரித்திருப்பதை கொ.நா.ம.தே.கட்சி வரவேற்கிறது.
அதே சமயம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் ஜி.அசோகன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலர் கே.செந்தில்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.