தருமபுரி பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை பிற்பகலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ. 1.79 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும், இதுதொடர்பாக இணை சார் பதிவாளர் மற்றும் 4 தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
தருமபுரி எஸ்வி சாலையில் நீதிமன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அருகே உள்ளது பத்திரப் பதிவுத் துறை வளாகம்.
இங்கு ஒருசில அதிகாரிகளும், பணியாளர்களும் லஞ்சம் வாங்குவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தனவாம்.
இந்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை பிற்பகலில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ. 1.79 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இணை- சார் பதிவாளர் அல்லா பக்ஷ் மற்றும் தரகர்கள் பார்த்தீபன், வேலு, தம்பிதுரை மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இரவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.