உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன்படி, உணவு வணிகம் செய்யும் அனைவரும் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பொருள் வணிகர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.
தருமபுரியில் வரும் திங்கள்கிழமை (டிச.18) ராமா போர்டிங் ஹோட்டலிலும், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் , மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் வரும் புதன்கிழமையும் (டிச.20) இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மேலும், பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமையும் (டிச. 21), தருமபுரி நகராட்சி அலுவலகம் மற்றும் காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வெள்ளிக்கிழமையும் (டிச. 22) நடைபெறுகின்றன.
பொம்மிடி ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் டிச. 23ஆம் தேதியும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிச. 27ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்குக் குறைவாக விற்றுமுதல் செய்து உணவு விற்பனை செய்வோர் ரூ. 100 மட்டும் கருவூலக் கணக்கில் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கு மேல் விற்றுமுதல் செய்து உணவு விற்பனை செய்வோர் ரூ. 2 ஆயிரம் உரிமக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இத்துடன் உணவு உற்பத்திக்கு ஏற்ப ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கட்டணமும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முகாமுக்கு வரும்போது, ஆதார் அட்டை, புகைப்படம், இடத்துக்கான ஆவணங்கள், கருவூலச் செலுத்துச் சீட்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலக தொலைபேசி எண்- 04342 230385-இல் தொடர்பு கொள்ளலாம்.