பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய கட்டட பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், லட்சுமாபுரம் மற்றும் கோம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கோம்பூர் மற்றும் லட்சுமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1.60 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, அரசு உயர்நிலைப் பள்ளிகளின் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.பழனியப்பன் தொடக்கிவைத்தார். இந்த விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் முருகன், வட்டார வளர்ச்சிஅலுவலர் மகாலிங்கம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலர் சி.தென்னரசு, அதிமுக ஒன்றியச் செயலர் வி.சி.கௌதமன், நகரச் செயலர் ஜெ. சரவணன், வருவாய் ஆய்வாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.