தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 63 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன் முன்னிலை வகித்தார். விழாவில் 63 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டவும், 4 பேருக்கு சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டவும், 2 பேருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டவும் என மொத்தம் 69 பேருக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் ஆணைகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் பேசும்போது, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 117 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுவதாகவும், மேலும் 69 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.