பொம்மிடி அருகே கர்நாடக போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பி.பள்ளிப்பட்டியில் தங்கியிருந்த ஜான்சனிடம் விசாரணை நடத்துவதற்காக கர்நாடக மாநில போலீஸார் வந்துள்ளனர்.
அப்போது, ஜான்சன் தரப்பினருக்கும், கர்நாடக போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கர்நாடக போலீஸார் பயன்படுத்திய வாகனங்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்தில் அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, இதில் தொடர்புடைய லூர்துபுரத்தைச் சேர்ந்த ராஜி மகன் ஜான்சன் (60), அதே ஊரைச் சேர்ந்த பவுல்ராஜ் முரளி (39) ஆகியோரை பொம்மிடி போலீஸார் கைது செய்தனர்.