அரூரை அடுத்த பேதாதம்பட்டியில் ஊர்புற நூலகத்துக்கு கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பேதாதம்பட்டியில் 1500- க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த ஊரில் பொதுநூலகத் துறை சார்பில், ஊர்புற நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் 450- க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இங்குள்ள நூலகத்தை வாச்சாத்தி, டி.புதூர், மாலகபாடி, கூக்கடப்பட்டி, பேதாதம்பட்டி, தாதனூர் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நூலகத்துக்கு என கட்டட வசதி இல்லாததால் அந்த ஊரில் அரசு தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான கட்டடத்தில் தாற்காலிகமாக நூலகம் இயங்கி வருகிறது. நூலகத்தில் தேவையான நூல்கள், தினசரி நாளிதழ்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு நூற்றுக்காண இளைஞர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
பேதாதம்பட்டியில் ஊர்புற நூலகம் அமைக்க தேவையான இடவசதி உள்ளதாம். ஆனால் அரசு சார்பில் உரிய நிதி ஒதுக்கீடு இல்லததால் கட்டடம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, அரூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மற்றும் தருமபுரி
மக்களவைத் தொகுதி உறுப்பினர் உள்ளிட்டோர் தங்களது நிதியில் இருந்து நூலகத்துக்கு தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு.