அரசுப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் 6,500 விதைப் பந்துகளை உருவாக்கியுள்ளனர்.
சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில், மரக்கன்றுகளை அதிகளவில் நடுவதற்காக பள்ளி மாணவர்கள் விதைப் பந்துகள் உருவாக்கும் திட்டம் அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறையின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் செயல்பட்டு வருகிறது.
காலியாக உள்ள நிலங்களில் இப் பந்துகளை வீசுவதன் மூலம், மழைக் காலங்களில் அதிலுள்ள விதைகள் செடிகளாக முளைத்து மரமாக வளரும்.
இதனை மாணவர்கள், களிமண் அல்லது செம்மண், பசுஞ்சாணம், இயற்கை உரம் ஆகிய மூன்றும் கலந்த கலவையில் சிறிய பந்துகளாக செய்து, நன்கு வளரக்கூடிய மர வகைகளான வேம்பு, புளி, புங்கை மற்றும் ஆலமர விதைகளில் ஏதேனும் ஒன்றை அதனுள் வைத்து, ஒரு நாள் நிழலில் காயவைத்தபின் அடுத்த நாள் வெயிலில் காயவைத்து விதைப் பந்துகளாக உருவாக்குகின்றனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ப.குணசேகரன் மற்றும் பள்ளி மாணவர்கள் இவ்வாறான 6,500 விதைப் பந்துகளை உருவாக்கியுள்ளனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், இவ்விதை பந்துகள் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தொடக்கி வைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விதைப் பந்து உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
இந்த விதைப் பந்துகளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இதில், பள்ளி தலைமை ஆசிரியை து.சபரீஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.