இளவரசன் மரணம் பற்றி விசாரிக்க தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் முன், திவ்யா மற்றும் அவரது தாய் தேன்மொழி ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
தருமபுரி மாவட்டம், நத்தம் குடியிருப்பைச் சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், கடந்த 2013 ஜூலை 4-ஆம் தேதி அரசுக் கல்லூரி பின்புறமுள்ள ரயில் பாதையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. விசாரணை ஆணையத்தின் மூன்று நாள் விசாரணை தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பயணியர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆணையத் தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் விசாரணையில், இளவரசனின் தந்தை இளங்கோ, தாய் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். அப்போது, ஆணையத்தின் வழக்குரைஞர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை, இளவரசனைக் காதல் திருமணம் செய்து கொண்டு, பிறகு பிரிந்து சென்ற திவ்யா மற்றும் அவரது தாய் தேன்மொழி ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
மேலும், பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பிலும் சிலர் ஆஜராகினர். வியாழக்கிழமை மட்டும் 9 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, இதுவரை 3 கட்டங்களாக விசாரணை நடைபெற்றுள்ளது. முதல் முறையும், தற்போதும் தருமபுரியிலும், இரண்டாம்கட்டத்தில் சென்னையிலும் விசாரணை நடைபெற்றது. மொத்தமாக இதுவரை 79 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஒரு முறை தருமபுரியில் முகாமிட்டு விடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.