தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அரசுப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
ஆண்களுக்கு, 100 மீ., 200 மீ, 800 மீ, 1,500 மீ ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடரோட்டம், கபடி ஆகிய போட்டிகள் மற்றும் பெண்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடரோட்டம் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, மேஜைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இப் போட்டிகளில், மாவட்டத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்கள் திரளானோர் பங்கேற்று விளையாடினர். போட்டிகளில், முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மாநில அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.