நீர்நிலைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பிரசாரம்
மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளையும் முறையாகப் பராமரித்துப் பாதுகாக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் இருசக்கர வாகனப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.
தருமபுரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பிரசாரம், புதன்கிழமை நல்லம்பள்ளி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளிலும், வியாழக்கிழமை மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், இண்டூர் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
பிரசாரப் பயணத்தின் கோரிக்கைகள்: ஆறுகள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தி தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 85 நீர்ப்பாசனக் கால்வாய்களை சீரமைத்து பாசன வசதியை உறுதி செய்ய வேண்டும்.
1,015 ஏரி, குளங்களைத் தூர் எடுத்து கரைகளைப் பலப்படுத்த வேண்டும். ஏரிகளை இணைக்கும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். இயற்கை வளங்கள் பாதுகாப்பை அந்தந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடகத்தில் காவிரியாற்றில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப் பயணத்தில் வலியுறுத்தப்பட்டன.
கூட்டமைப்பின் தலைவர் டீப்ஸ் சங்கர் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் இருசக்கர வாகனங்களில் பிரசாரப் பயணத்தில் பங்கேற்றனர்.