தருமபுரியில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் தொடர்பான ஆன்லைன் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் 33 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான, பணிமாறுதல் கலந்தாய்வு உள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்தாய்வினை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தொடங்கி வைத்தார். இதில், உள் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் பணிமாறுதல் ஆணையைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் வெளி மாவட்டத்தினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இதேபோல, சனிக்கிழமை (மே 20) மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் வரும் திங்கள்கிழமை (மே 22) முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.