தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பணிமனை முதல் கோட்டப்பள்ளம் முனியப்பன் கோயில் வரை மற்றும் பென்னாகரம் பணிமனை முதல் ஊத்துப்பள்ளத்தூர் வரையிலான புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து இவ்விரு புதிய பேருந்துகளும் இயக்கி வைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். காலை மற்றும் மாலையில் தலா இரு நடைகள் இயக்கப்படவுள்ள இப்பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளர் கஜேந்திரன், துணை மேலாளர் மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மண்டல மேலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.