தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே, மதுக்கடையை அகற்றக் கோரி, திரண்ட பொதுமக்கள் கடைக்குள் புகுந்து அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணாபுரம் அருகே இண்டமங்கலம் செல்லும் சாலையில் அண்மையில் மதுக்கடை அமைக்கப்பட்டது. இந்த மதுக்கடையை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்தினர். இதனால்,மதுக் கடை அங்கிருந்து அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதனால், திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இருப்பினும், மதுக் கடை மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை செய்துள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், கடைக்குள்ளே புகுந்து மதுப் புட்டிகளை அப்புறப்படுத்த முற்பட்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த, கிருஷ்ணாபுரம் போலீஸார், அங்கு விரைந்து சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தி, டாஸ்மாக் நிர்வாகத்திடம பேசி மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, பொதுமக்களை திருப்பி அனுப்பிவைத்தனர்.