சாமியாபுரம் கூட்டுச் சாலையில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் காளிப்பேட்டை, மஞ்சவாடி, சாமியாபுரம், பட்டுகோண்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
நிகழாண்டு புதன்கிழமை காலை 10 மணியளவில் கூத்தாண்டவர் சுவாமி தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை கூத்தாண்டவருக்கு சிறப்பு பூஜையும், மாலை 3 மணியளவில் சுவாமியின் தலை இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பிறகு சுவாமிக்கு ஆட்டுக்கிடா பலியிடும் பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.