அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுடன் செல்லிடப்பேசி மற்றும் ஆதார் எண்களை இணைக்க வெள்ளைத்தாளில் கணக்கு எண்ணுடன் ஆதார் அட்டையின் நகலை இணைத்து, அருகிலுள்ள அஞ்சல் பெட்டியில் போடலாம் என தருமபுரி கண்காணிப்பாளர் ந.கார்த்திகேயன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: தற்போது மத்திய அரசின் அனைத்து வகையான அஞ்சல் சேமிப்புக் கணக்குகளுடன் வாடிக்கையாளர்கள் தங்களின் செல்லிடப்பேசி எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, அனைவரும் இந்தப் பணிகளை விரைவில் மேற்கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத் திட்டங்களின் நன்மைகளும் தங்கள் சேமிப்புக் கணக்கு மூலம் பெறலாம்.
புதிய கணக்குகளைத் தொடங்குபவர்களிடம் ஆதார் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை பெற்ற பிறகே கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அஞ்சலகம் சென்று பதிவு செய்ய இயலாதவர்கள், ஒரு வெள்ளைத் தாளில் சேமிப்புக் கணக்கு எண்கள், ஆதார் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை எழுதி, ஆதார் அட்டையின் நகலையும் இணைத்து அருகிலுள்ள அஞ்சல் பெட்டியில் போட்டுவிடலாம்.