தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகரத் தலைவர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பரவலாக மழை பெய்து வரும் சூழலில் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. நீர்வழிப் பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகள்தான் இதற்கான காரணமாக உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் நீர்வழிப் பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
மழையை அடுத்து விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கவும், போதிய பயிற்சிகளை வேளாண் துறை மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் 100 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி கொண்டாட முடிவு செய்யப்பட்டது.