தருமபுரி மாவட்ட இறகுப் பந்து அகாதெமியில் காலியாக உள்ள இடங்களுக்கு நவ.15-இல் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், இறகுப்பந்து அகாதெமியில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வுப் போட்டிகள் நவ.15-ஆம் தேதி காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுப் போட்டியில், 2002 ஜன.1-ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாதத்தில் 25 நாள்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி அளிக்கப்படும். உணவுப்படி, போக்குவரத்துப்படி, சீருடை செலவினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும். தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வயது சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் இறகுப்பந்து அகாதெமிக்கான தேர்வுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.