தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப் பகுதியை ஆக்கிரமித்தவர் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி வனக்கோட்டம், பாலக்கோடு வனச்சரகம், சொக்கம்பட்டி காப்புக்காடு பகுதியில் வனச்சரகர் எஸ்.ஜெகதீசன், வனவர் வி.வெங்கடேசன், வனக்காப்பாளர்கள் உள்ளிட்டோர் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போட்ரஹள்ளி சரகப் பகுதியில், ஆலமரத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கா.கோவிந்தசாமி(45) என்பவர் அத்துமீறி நுழைந்து, காப்புக்காட்டில் புல், பூண்டு, செடி, புதர்களை சுத்தம் செய்து வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருந்தார். இதனையடுத்து, வனப்பகுதியை ஆக்கிரமித்த கோவிந்தசாமியை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.