அரூர் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜே.பழனி தலைமை வகித்தார்.
அரூர் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை தூய்மை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்த முடியும். அதேபோல, மருத்துவமனையின் கட்டட வசதிகளை மேம்படுத்த முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதி, மின் விசிறி, உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இந்த வகை நோயாளிகளுக்கு தனியாக ஆய்வகம், மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதயம், கண், காது, மூக்கு தொண்டை, எலும்பு முறிவு, நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு சிறப்பு மருத்துவர்கள், ஸ்கேன் கருவிகள், நவீன வசதியுடன் கூடிய அறுவைச் சிகிச்சை அரங்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், திமுக மாவட்ட செயலர் சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை எம்.எஸ்.விசுவநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலர் சா.ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் சி.தேசிங்குராஜன், நகர பொறுப்பாளர் முல்லை செழியன், பேச்சாளர் ப. செந்தாமரைக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.சந்திரமோகன், கு.தமிழழகன், வட்டத் தலைவர் ஏ.தீர்த்தகிரி, வட்டச் செயலர் கே.வீராசாமி, பொருளாளர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.