தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் 5 டிஜிட்டல் வாகனங்கள் மூலம் கிராமங்கள்தோறும் சென்று திரையிடும் வகையிலான திரைப்பட விழாவை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதற்காக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்னணு விளம்பர வாகனங்கள் தருமபுரி வந்துள்ளன.
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள், பாடல்கள், அரசின் திட்டப் பணிகள் குறித்த குறும்படங்கள் இந்த வாகனங்கள் மூலம் திரையிடப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை இந்தத் திரைப்பட விழாவை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், முன்னாள் மாவட்ட ஊராடசித் தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பூக்கடை ரவி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.