தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பொது இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறைச் செயலர் ஆகியோர் காணொலிக் கருத்தரங்கில் அறிவித்தபடி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயுஷ் பிரிவுகள் செயல்படும் இடங்களான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருந்தகங்களிலும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர் அனைத்து நாள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாள்களும் சிறப்பு மருத்துவ முகாம்களாக மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பொது இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், சித்த மருத்துவத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இல்லாதவர்களும் நிலவேம்பு குடிநீரை வாங்கிப் பருகலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.