மாற்றுத் திறனாளிகளைத் தாக்கி, கேவலமாகப் பேசிய பென்னாகரம் தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாணைப்படி மாதாந்திர உதவித்தொகை வழங்காமல் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏமாற்றுவதாக போராட்டத்தின் துண்ட
றிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.ஜி.கரூரான், பென்னாகரம் வட்டத் தலைவர் பி.கே.மாரியப்பன் உள்ளிட்டோர் பென்னாகரத்தில் இருந்த போது, அவ்வழியே வந்த தனி வட்டாட்சியர் பிரபாகரன் நிர்வாகிகளை தரக்குறைவாகத் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வந்தனர். தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமார் 30 பேருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும், தனி வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.