ஒகேனக்கல்லில் நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து புதன்கிழமை மாலை 35,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், பிரதான அருவிக்குச் செல்லும் வாயில் அடைக்கப்பட்டது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து புதன்கிழமை மாலை 35,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், பிரதான அருவிக்குச் செல்லும் வாயில் அடைக்கப்பட்டது.
 காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் மூலம் ஒகேனக்கல் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அவ்வப்போது பெய்யும் மழைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் மட்டும் 171.40 மி.மீட்டர் அளவு மழை பதிவானது.
 இதனால், வெள்ளநீர் ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, புதன்கிழமை காலை ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 22,000 கனஅடியாகவும், மாலை நிலவரப்படி 35,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால், பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் கொட்டுகிறது.
 வெள்ள நீர் பிரதான அருவிக்குச் செல்லும் பாதையை மூழ்கடித்து செல்வதால் பாதுகாப்புக் கருதி, அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
 அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையும் தொடருகிறது. மேலும், தொடர் மழை காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com